ஞாயிறு, 30 ஜூன், 2013

காதலறியா காதலர்கள் ...



ஆகப்பெரிய முயற்சிகளின் மூலமாக
அடியோடு மறந்திடவே நினைக்கிறேன்
தோற்றுப்போன என் காதலையும்
தோற்கடித்துப் போன என் தேவதையையும்...

எப்படியெனினும் ஏதாவதொரு வகையில்
நினைவுபடுத்தியே போகிறது
வருடாவருடம் வரும் காதலர் தினங்களும்
வளையவரும் காதலறியா காதலர்களும்...

இதுபோன்ற ஒரு கருப்பு தினத்தில் தான்
இதுபோன்ற ஒரு காதலர் தினத்தில் தான் -அவள்
காரணங்கள் ஏதுமின்றி காணாமல் போயிருந்தாள்
என் உண்மை காதலை 'காணாமல்' போயிருந்தாள் ...


எப்போதும் போலவே பார்த்தாய்
எப்போதும் போலவே சிரித்தாய்
எப்போதும் போலவே தோள் சாய்ந்தாய்
அதற்கு முதல் நாள் வரையிலும் .

எப்போது நீ நடித்தாய்?
இப்போதும் புரிபடவே இல்லை ...


எப்படி உன்னால் மட்டும் ஒரே நேரத்தில்
ஒருவன் காதலை கொன்று
ஒருவன் காதலை காப்பாற்ற முடிந்தது?

காதல் தெய்வீகம்
காதல் புனிதம்
காதலே கடவுள்
காதலே வாழ்க்கை
யாருக்கு ?
தோற்றுப்போன எனக்கா?
தோற்கடித்துப் போன உனக்கா?

அந்த நாள் காலையிலும்
சலனங்கள் ஏதுமில்லாமல்
இயல்பாகவே நீ இருந்தாய்
இல்லையில்லை நடித்துக்கொண்டிருந்தாய் ...

ஐந்து மணி வாக்கில் என் அலைபேசி மணி ஒலித்தது
ஐந்தாறு வார்த்தைகளில் நீ சொன்னாய்

"நான் காதலித்தவனை கரம் பிடிக்கிறேன்
எனக்கான வாழ்க்கையினை நானே தீர்மானிக்கிறேன்
மன்னித்துவிடுங்கள் அப்பா "...

ஆகப்பெரிய முயற்சிகளின் மூலமாக
அடியோடு மறந்திடவே நினைக்கிறேன்
தோற்றுப்போன என் காதலையும்
தோற்கடித்துப் போன என் தேவதையையும்...

- தோழர் ஹீரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக