செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

நிழற்ப்படம் !






செல் போன் கேமராக்களின் உபயத்தில் நினைத்த நேரத்தில் நமது புகைப்படத்தை எடுத்து நிமிட நேரத்தில் இணையம் மூலம் உலகெங்கும் பதிவேற்றுகிறோம்.புகைப்படம் எடுக்க ஸ்டுடியோக்களை விட்டால் வேறு வழியே இல்லை என்ற நிலை இருந்த காலத்தில் அப்பாவி எழுத்தாளர் ஒருவருக்கும்,சர்வாதிகார புகைப்படக்காரர் ஒருவருக்கும் இடையே நிகழும் சில நிமிட நிகழ்வுகளை விவரிக்கும் புகழ் பெற்ற சிறுகதை "WITH THE PHOTOGRAPHER".1902 இல் எழுதப்பட்டது.STEPHEN LEACOCKஎழுதியது.மிகச் சிறிய கதை.கதையின் கடைசி பத்தி வரை நகைச்சுவை நிரம்பி வழிய,கடைசி பத்தி உருக வைக்கிறது.கதைக் கருவின் மிக மிக சுருக்கமான மொழியாக்கம் :

தனது புகைப்படம் எடுக்க வேண்டி கதையின் எழுத்தாளர் ஸ்டூடியோ ஒன்றிற்கு செல்கிறார்.அவரை ஒரு மணி நேரம் காக்க வைக்கும் புகைப்பட "நிபுணர்" பின்பு அவரை அதிகார தோரணையில் உள்ளே அழைக்கிறார்.அமர்ந்ததும் போடோக்ராபர் சொல்லும் முதல் வார்த்தை,

"உங்க மூஞ்சியே சரி இல்லையே " ;

பின்பு எழுத்தாளரை நெருங்கும் புகைப்படக்காரர் அவரது முகத்தை தனது இரு கரங்களுக்கு நடுவே பற்றுகிறார்.முத்தமிடப் போகிறாரோ என அஞ்சும் எழுத்தாளர் கண்களை மூடிக் கொள்ள,புகைப்படக்காரர் அவரது தலையை இந்த புறமும்,அந்தப் புறமுமாக சுழற்றுகிறார்.பின்பு கட்டளைகள் பறக்கின்றன :

உங்க தலை எனக்கு பிடிக்கல,
வாயை திறங்க கொஞ்சம்....சரி சரி வேணாம் வாயை மூடிக்கோங்க,
காது ஏன் இவ்ளோ மோசமா நீண்டுட்டு இருக்கு,கொஞ்சம் தலையை தொங்க விடுங்க,காதுங்க கீழ வர மாதிரி,
இப்ப கண்ண கொஞ்சம் உருட்டி பாருங்க...கையை முழங்காலுல வையுங்க,நல்லா இழுத்து மூச்சு விடனும்........ETC ETC ETC

ஆத்திரம் அடைந்த எழுத்தாளர் ஆவேசத்துடன் இது என் முகரை,இதோட தான் நான் நாற்ப்பது வருசமா வாழுறேன் என்று எல்லாம் கூறிக் கொண்டே எழ முயல

"க்ளிக்" .....புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டது.அடுத்த வாரம் தரப்படும்.

அடுத்த வாரம் புகைப்படத்தை வாங்கச் செல்கிறார் எழுத்தாளர்.புகைப்படம் மிக அழகாக எடுக்கப்பட்டு இருந்தது.ஆனால் புருவங்கள்,கண்,காது,உதடுகள் எல்லாம் ரீ டச் செய்யப்பட்டு அழகாக்கப்பட்டு இருந்தது.தனது திறமையை எழுத்தாளர் மெச்சப் போகிறார் என எதிர்ப்பார்க்கிறார் புகைப்பட நிபுணர்.எழுத்தாளர் பேச ஆரம்பிக்கிறார் :

"நான் எதிர்ப்பார்த்து வந்தது எனது புகைப்படத்தை.நான் இறந்த பின் என் குடும்பத்தினரும்,நண்பர்களும் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை நினைவு கூறும் விதமாக என்னை அசலாக காட்டும் என் புகைப்படத்தை. இந்த படத்தில் உள்ளது நான் அல்ல.என்ன தான் உங்கள் நிபுணத்துவம் வெளிப்பட்டு இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை இது பயன் இல்லாத குப்பைக் காகிதம் என்று சொல்லி விட்டு கண்ணீருடன் வெளியேறுகிறார்"


# என் பேஸ்புக் தோழி விஜய லட்சுமியின் பேஸ்புக் பக்கத்திலிருந்து