ஞாயிறு, 30 ஜூன், 2013

சாதின்னா என்னங்க எசமான்....

                                                           படம்: நன்றி வினவு   



உள்ளே நுழையாதே                         
ஊழியம் செய்ய பிறந்தவனே 
உள்ளே நுழையாதே....

ஏன் எசமான் என்னை தடுக்கறீங்க ?
என்ன குற்றம் எங்கிட்ட பாத்தீங்க?

நீ வேற சாதியடா வெவரமற்றவனே,
நீ தாழ்ந்த சாதியடா தகுதியற்றவனே....

என்னைப்போலத்தான் நீங்களும் இருக்கீங்க
உங்களைப்போலத்தான் நானும் இருக்கேன்,
நம்மை வேறுபடுத்தும் சாதிஎதுவும் -என்
கண்களுக்கு காணலையே,
வெவரமா சொன்னா  வெளங்கிககுவேன்  எசமான்...

நான் திருமால் தலையில் பிறந்த
உயர்ந்த சாதியடா,-நீ
காலில் பிறந்ததனால்
தாழ்ந்த சாதியடா....
வேதப்புத்தகத்தில் உள்ளதெல்லாம்
படிக்க உனக்கு தகுதி இல்லையடா...

எம்புள்ள படிக்கிற அறிவியல் புத்தகத்தில்
மனுஷனுக்கு கருப்பை வயித்துல இருக்குதுன்னு
படம் வரஞ்சு பாகம் குறிசிருக்கே-உங்க
வேதம் சொல்றது பொய்யுங்க எசமான்-அந்த
பொய்கள படிக்க எனக்கு ஆசையில்ல எசமான்.

அப்படின்னா பொய்கள் தான் சாதியா எசமான் ?

எதிர்த்துப்பேசாதே எகத்தாளம் புடுச்சவனே,
திருப்பிபேசாதே திமிரு பிடுச்சவனே,
கூலி கொடுக்கும் பண்ணையார் நான்,
கூலிக்கு உழைக்கிற அடிமை நீ
இந்த வேறுபாடு சாமி படச்சதடா ....

நீங்க அப்படி இருக்க காரணமும் சாமியில்ல ,
நான் இப்படி இருக்க காரணமும் சாமியில்ல ,
என் உழைப்ப சுரண்டி உங்க வயிறு பெருக்குது 
உங்களுக்கு உழைச்சு உழைச்சு என் வயிறு சுருங்குது,
பொது உடைமை ஆட்சி வரப்போகுது எசமான்-அப்ப
உங்களுக்கும் எனக்கும் ஒரே பேருதான் எசமான்
உழைப்பாளி என்கிற ஒரே பேருதான் எசமான் .

அப்ப காசு பணம் தான் சாதியாஎசமான் ?

எம்பேருக்கு பின்னாலே சாதி பேரு  போட்டா
அது எனக்கு கௌரவண்டா
உஞ்சாதி பேரு சொன்னாலே கேவலண்டா...

எம்பெயர எங்கப்பா அம்மா  வச்சாங்க
உங்க பெயர உங்க அம்மா அப்பா வச்சிருப்பாங்க
செத்துப்போனா உங்களுக்கும் எனக்கும்
 ஒரே பேருதான் எசமான்
பொணம் என்கிற ஒரே பேருதான் எசமான் .

அப்படின்னா பேருதான் சாதியா எசமான் ?

உன்னைப்போல பேசுன எல்லோரும்
போன எடம் தெரியுதா?
நந்தனுக்கு ஆன கதியில்
 உனக்கு பாடம் இருக்கு புரியுதா ?
கீழ வெண்மணி வரலாறு
 சொன்ன செய்தி விளங்குதா?.....

நல்லா தெரியுது எசமான்,
விவரம் புரியுது எசமான்
ஒன்னு மட்டும் சொல்லுறேன் எசமான்
நந்தனப்போல் எரிஞ்சுபோக
இது புரானக்காலமும் இல்ல எசமான்
கீழ வெண்மணிபோல் கருகிப்போக
இது அறியாமைக் காலமும் இல்ல எசமான்...,

அப்படின்னா இந்த கொலைவெறி தான் சாதியா எசமான்?


உடம்புக்குள்ள செங்குருதி ஓடுது எசமான்
நெஞ்சுக்குள்ள செங்கொடியும்  பறக்குது எசமான்
மார்க்சியம் இப்போ புரிஞ்சுபோச்சு எசமான்
பயமெல்லாம் நெஞ்சவிட்டு  பறந்துபோச்சு எசமான் ...
 உங்கள் பகட்டும், அதிகாரமும் பறக்கப்போகுது எசமான்
இனி வரப்போவது சாதிப்போர் இல்லை எசமான்
விண்ணை முட்டும் வர்கப்போர் எசமான்

வீரஞ்செறிந்த விவசாயப்படையொன்று வருகுது எசமான்
தோள் தடித்த தொழிலாளர் படையொன்று வருகுது எசமான்
சமதர்ம உலகு படைக்க செந்தொண்டர் படையொன்று வருகுது எசமான்
பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் நிலைக்கப்போகுது எசமான்....


ஐயோ ! என்ன கொடுமை இது!
கலிகாலம் இதுதானா கடவுளே,
கூலி கேட்கும்  கூட்டமெல்லாம்    கூடிவருகுதா ?
அடங்கிப்போகும் கூட்டமெல்லாம் ஆட்சி செய்யுதா ?
  தீண்டாமை சுவர்களெல்லாம் தூளாகப்போகுதா?
ஒசந்த சாதி, தாழ்ந்த சாதி ஒன்றாகப்போகுதா  ?
பண்ணையும்,அடிமையும் ஒன்றாகப்போகுதா ?
காற்று போல நிலமும் ,வளமும்  பொதுவாகப்போகுதா?

சாதிப்பேரால் ஏமாற்றி வாழ்ந்த வாழ்க்கை முடியப்போகிறதா?


அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?

- தோழர் ஹீரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக