புதன், 3 ஜூலை, 2013

எனக்கும் உண்டு ஒரு பெரிய உலகு...



முக்காடு போடாமல்
வாசலில் நிற்காதே
புர்கா அணியாமல் 
வீதியில் நடக்காதே 

ஜன்னத்து கிடைக்காது 
ஜன்னலில் பார்க்காதே
மையத்தும் மதிக்காது 
மாடியில் உலவாதே 

சத்தமாய் சிரித்து 
சைத்தானை அழைக்காதே 
வெட்கமற இருந்து 
இப்லீஸை இழுக்காதே 

தலை நிமிர்ந்து நடந்து 
'தவ்பா' வை இழக்காதே 
பலர்முன்பு பேசி
'பத்வா 'வாங்காதே 

எவ்வளவோ தடைகள் 
எப்போதும் விதிக்கிறாய் ,
என் சுயத்தின் கழுத்தை -இரு 
கைக்கொண்டு  நெறிக்கிறாய் 

என்சுதந்திர வானில் 
முள்வலையை விரிக்கிறாய் 
உன் ஆதிக்கச் சங்கிலியில் 
என் பெண்மையை பினைக்கிறாய் 

ஒழுக்கம் என்கிறாய் -பெரும் 
கற்பு என்கிறாய் -எனைப் 
பண்டமாய்ப் பார்க்கிறாய் -வெறும் 
பொருளாய் நினைக்கிறாய் 
பொறுப்பென பிதற்றுகிறாய் 
பாதுகாப்பென கதைக்கிறாய் 

உன் குற்றங்களை நியாயப்படுத்த 
குரானையும் ஹதீசையும் 
துனைக்கழைத்துக்  கொள்கிறாய் 

நான் தூங்குகையில் 
கைபேசியில் தேடுகிறாய் 
நான் குளிக்கையில் -என் 
நாட்காட்டியில் நுழைகிறாய் 

என் முகநூலை உளவு பார்க்க 
முகமூடியில் வருகிறாய் 
புர்காவில் மூடாத 
என் முகக்கண்களை வேவுபார்க்க 
நான் அறியாமல் தொடர்கிறாய் 

நடக்கையிலும் நிற்கையிலும் - ஒரு 
ஜோடிக்கண்கள் எனை 
ஊடுருவிப் பார்ப்பதை 
அவ்வப்போது உணர்கிறேன் 

பேசும்போதும் சிரிக்கும்போதும் - ஒரு 
திருட்டுக்கண்கள் என் அந்தரங்கத்தில் 
நுழைவதை எப்போதும் அறிகிறேன் 

தாய்ப்பாலின் தூய்மை அளக்க 
தராசு கேட்கும் இரக்கமற்றவன் நீ 

மறுமொழி சொன்னால் 
முகம்பார்க்க மறுக்கிறாய் 
காரணம் கேட்டால் 
கண்பார்த்து முறைக்கிறாய் 

உயிர்அழும் நேரங்களில் 
உறங்காமலே விடிந்துபோன 
இரவுகளை நீ அறிவாயா?

என் தலையணை ஓரங்களில் உறைந்துபோன 
உப்புநீர்  ஓவியங்களை 
என்றாவது நீ உணர்வாயா?

வேர்களின் அழுகுரல் 
வெட்டுபவற்கு தெரிவதில்லை 

பறவையின் அபலக்குரல் 
வேடர்களுக்கு புரிவதில்லை 

உன்னைப் பொறுத்த வரை நான் 
உன் காமம் தணிக்கும் போகக்காரி 
உன் வீட்டைப்பெருக்கும் வேலைக்காரி 

இன்ஷா அல்லாஹ் இன்னல் தீருமென்று 
இரவும் பகலும் தொழுதும் கூட 
எல்லாம் வல்லவனின் கிருபை 
எனக்கு மட்டும் கிடைக்கவில்லை 

செத்துவிடத்தான் நினைக்கிறேன் 
பெற்ற பிள்ளை முகம் தடுக்குது - உன்னை 
விட்டுவிடத்தான் நினைக்கிறேன் 
உற்ற சொந்தம்  வந்து முறைக்குது 

சமாதனம் சொல்ல வரும் 
சொந்தங்களுக்கு எப்படிச்சொல்வேன் 
என் தன்மானம் தற்கொலை செய்து 
ஆண்டு சில ஆனதென்று 

இயல்பான புரிதல் மறுத்து 
எதிர்மறை எண்ணம் வளர்த்து 
எண்ணங்களால் குழம்பித் தவித்து 
குழப்பத்தில் சுயநிலை இழந்து 

உன்னை நீயே உணர மறந்து 
விபரீத கற்பனையில் பறந்து 
எங்கோ எதையோ தேடித்திரிந்து 
தொலைத்தாய் நீ அமைதி மருந்து 

இல்லாத பழியொன்றை 
என்மேல் சுமத்த துடிக்கிறாய் 
உன் சந்தேகக்  கருநஞ்சை 
possessiveness என அழைக்கிறாய் 

சந்தேகம் உள்ளே வந்தால் 
சந்தோஷம் ஓடிப்போகும்

இனியாவது உணரப்பழகு 
இயல்பாக வாழப்பழகு 
இல்லையெனில் தூர விலகு 
எனக்கும் உண்டு ஒரு பெரிய உலகு...

தோழர் - ஹீரா

1 கருத்து:

  1. //இயல்பான புரிதல் மறுத்து
    எதிர்மறை எண்ணம் வளர்த்து
    எண்ணங்களால் குழம்பித் தவித்து
    குழப்பத்தில் சுயநிலை இழந்து

    உன்னை நீயே உணர மறந்து
    விபரீத கற்பனையில் பறந்து
    எங்கோ எதையோ தேடித்திரிந்து
    தொலைத்தாய் நீ அமைதி மருந்து

    இனியாவது உணரப்பழகு
    இயல்பாக வாழப்பழகு
    இல்லையெனில் தூர விலகு
    எனக்கும் உண்டு ஒரு பெரிய உலகு...//

    உண்மையான வரிகள்....வலிமையான கவிதை.....நன்றி பகிர்ந்தமைக்கு

    பதிலளிநீக்கு