ஞாயிறு, 30 ஜூன், 2013

காதலறியா காதலர்கள் ...



ஆகப்பெரிய முயற்சிகளின் மூலமாக
அடியோடு மறந்திடவே நினைக்கிறேன்
தோற்றுப்போன என் காதலையும்
தோற்கடித்துப் போன என் தேவதையையும்...

எப்படியெனினும் ஏதாவதொரு வகையில்
நினைவுபடுத்தியே போகிறது
வருடாவருடம் வரும் காதலர் தினங்களும்
வளையவரும் காதலறியா காதலர்களும்...

இதுபோன்ற ஒரு கருப்பு தினத்தில் தான்
இதுபோன்ற ஒரு காதலர் தினத்தில் தான் -அவள்
காரணங்கள் ஏதுமின்றி காணாமல் போயிருந்தாள்
என் உண்மை காதலை 'காணாமல்' போயிருந்தாள் ...


எப்போதும் போலவே பார்த்தாய்
எப்போதும் போலவே சிரித்தாய்
எப்போதும் போலவே தோள் சாய்ந்தாய்
அதற்கு முதல் நாள் வரையிலும் .

எப்போது நீ நடித்தாய்?
இப்போதும் புரிபடவே இல்லை ...


எப்படி உன்னால் மட்டும் ஒரே நேரத்தில்
ஒருவன் காதலை கொன்று
ஒருவன் காதலை காப்பாற்ற முடிந்தது?

காதல் தெய்வீகம்
காதல் புனிதம்
காதலே கடவுள்
காதலே வாழ்க்கை
யாருக்கு ?
தோற்றுப்போன எனக்கா?
தோற்கடித்துப் போன உனக்கா?

அந்த நாள் காலையிலும்
சலனங்கள் ஏதுமில்லாமல்
இயல்பாகவே நீ இருந்தாய்
இல்லையில்லை நடித்துக்கொண்டிருந்தாய் ...

ஐந்து மணி வாக்கில் என் அலைபேசி மணி ஒலித்தது
ஐந்தாறு வார்த்தைகளில் நீ சொன்னாய்

"நான் காதலித்தவனை கரம் பிடிக்கிறேன்
எனக்கான வாழ்க்கையினை நானே தீர்மானிக்கிறேன்
மன்னித்துவிடுங்கள் அப்பா "...

ஆகப்பெரிய முயற்சிகளின் மூலமாக
அடியோடு மறந்திடவே நினைக்கிறேன்
தோற்றுப்போன என் காதலையும்
தோற்கடித்துப் போன என் தேவதையையும்...

- தோழர் ஹீரா

மனித குல வரலாற்றுப்போக்கில் வர்க்கமும், சாதியமும்.


 'எங்கள்  முன்னோர் சமூகம் ஏழைகளாக  இருந்ததினால்   நாங்கள் இன்று தாழ்த்தப் பட்டவர்களாக  இருக்கிறோமா ? இல்லை  தாழ்த்தப் பட்டவர்களாக நாங்கள் இருப்பதால்  இன்று  ஏழைகளாக  இருக்கிறோமா?'

 கடவுள் உலகை படைத்தார், கடவுளே சகல ஜீவராசிகளையும் படைத்தார் என்பது போல கடவுளே சாதிகளை, ஏற்றத்தாழ்வுகளை  படைத்தார் என்பதும் அப்பட்டமான பொய் என்பதை கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.ஏற்கனவே இது பற்றி  அறிந்த தோழர்கள் பொருத்தருள்க.அவசியம் கருதி எதையும் தவிர்க்க முடியவில்லை. மேலும் எனக்கு கள ஆய்வு  செய்யும் வாய்ப்பு இல்லை .பெரும்பாலும் பிரதிகளையே என் ஆய்வுக்கு எடுத்திருக்கிறேன் . உதவிய நூல்களின் பெயர்களை இறுதியில் கொடுத்துள்ளேன். இதில் யாருக்கேனும் மறுப்பு இருந்தால் ஆதாரத்தோடு சுட்டி காட்டினால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன் .

உலகில் இந்தியா தவிர ஏறத்தாழ அணைத்து நாடுகளிலும் வர்க்கங்களாக பிளவு படுத்தபட்டுள்ள மக்கள் சமூகம் இந்தியாவில் மட்டும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத, சிக்கலான, சூழ்ச்சிகரமான சாதிய கட்டமைப்பாக பிளவு படுத்தப்பட்டுள்ளது. அதாவது எளிதாக சொன்னால் வர்க்க பிரிவினை மதச்சாயம், சாதிச்சாயம் பூசப்பட்டு வேறு வடிவில் இருக்கிறது .எல்லா நாடுகளிலும் உழைக்கும் மக்கள் தம் அவலங்களுக்கு எதிராக களம் இறங்கி போராடுகையில் இந்தியாவில் அதற்கான சுவடு கூட இல்லாமல் மக்களை மழுங்கடிக்கப்பட்ட உணர்வு நிலையிலேயே வைத்திருப்பது தான் சாதியத்தின் வெற்றி.இதன் வேர்களை சிறிது மனித குல வரலாற்று பின்னணியிலிருந்து பார்ப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

ஆதி சமூகத்தில் குடும்ப உறவு முறை இருக்கவில்லை .மனிதர்கள் சிறு சிறு கூட்டங்களாக  அதாவது சமூக குழுக்களாக சேர்ந்து வாழ்ந்தனர் .இதில் ஆணும் பெண்ணும் சமம். ஆனாலும் வேட்டையாடுதலில் முன்னிலை வகித்தல் ,வேட்டையாடப்பட்ட உணவை தன் குழுவினருக்கு பகிர்ந்து கொடுத்தல் ,நிர்வாகம் போன்ற முக்கிய பொறுப்புகள் அனைத்தும் பெண்களிடமே இருந்தது .அதாவது குழு தலைமை பெண்கள் வசமே இருந்தது. இதை பழைய கற்கால தாய் வழி சமூகம் என தொல்லியல் துறையினர் வரையறுக்கின்றனர்.

வேறுபாடின்றி எல்லா குழுக்களும் ஆரம்பத்தில் தொடர்ந்து நாடோடி வாழ்க்கையே வாழ்ந்து வந்தனர் .நிலையாக ஒரு இடத்தில வாழாமல் தொடர்ந்து உணவு சேகரிப்புக்காக இடம் பெயர்ந்து கொண்டே இருந்தனர்.வேட்டையாடுதல் மற்றும் மீன் பிடி தொழில் மட்டுமே பிரதான தொழிலாக இருந்தது.இந்த கால கட்டத்தில் வேறுபாடின்றி எல்லா மனிதர்களுக்கும் இறைச்சியே பொது உணவு.(ஆனால் இன்றைய சூழலில் இறைச்சி உண்பவர்கள் கீழானவர்கள் என்றும்இறைச்சி உண்ணாதவர்கள் மேலானவர்கள் என்றும் ஒரு பொய்யான பரப்புரை நம் சமூகத்தில் இருப்பதை இதோடு பொருத்தி பார்க்க வேண்டும்.)

பிரசவ கால ஓய்வில் இருந்த பெண்கள் தாம் உண்டு வீசிய தாவர உணவின் எச்சங்களிலிருந்து அதே வகையான புதிய தாவர இனம் வளர்வதை கண்டார்கள்.விவசாயத்தின் அறிமுகம் கண்டறியப்பட்டு விட்டது.ஆக விவசாயத்தை மனித குலத்துக்கு தந்த பெருமையும் பெண்களையே சேரும்.கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் உணவுக்காக கால்நடைகள் வளர்ப்பதும் ஆரம்பமாகியது ,சிறு சிறு உழைப்புச் சாதனங்களையும் மனிதன் கண்டறிய துவங்கினான்.

உணவு சேகரிப்பு வாழ்க்கை முறையிலிருந்து உணவு தானிய உற்பத்தி முறைக்கு மனிதன் முன்னேறினான்.இந்த காலகட்டம் மனித குல வரலாற்றில் மிக முக்கிய காலகட்டமாகும். உற்பத்தியும்,கூட்டு உழைப்பும் பொருளாதார சமூக அமைப்பில் புரட்சி கரமான மாற்றத்தை கொண்டு வந்தது.இதிலிருந்து புதிய கற்கால யுகம் துவங்குகிறது.  

மனிதன் விவசாயம் துவங்கி பல ஆயிரம் ஆண்டுகள் வரையிலும் கூட அது மனிதனின் பிரதான தொழில் ஆகவில்லை .வளமான பூமியும் நீரும் கிடைக்காத இடங்களில் வாழ்ந்த மனிதர்க்கு நாடோடி வாழ்க்கையே தொடர்ந்தது..ஆனால் விவசாயம் பிரதான தொழிலாக கொண்ட சமூக குழுக்கள் முதன் முதலில் மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து மேற்கு இந்தியா வரை பரவியிருந்தது .சுருக்கமாக சொல்வதானால் மனித சமூகப்பரினாமத்தில் இந்த முக்கிய நடவடிக்கை  நைல் நதியிலிருந்து சிந்து நதி வரையிலான பகுதிகளிலேயே ஏற்பட்டது,இங்கிருந்துதான் வளர்சிக் கட்டத்திற்கான துவக்கம் பல பகுதிகளுக்கும் பரவியது.இது கி.மு. 3000 ஆண்டுவாக்கில் நிகழ்ந்ததாக கணக்கிடப்படுகிறது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் துவக்கத்தால் மனிதனின் உற்பத்தி சக்தி பலமடங்கு பெருகிவிட்டது.இப்போது அவன் உணவுக்காக பழங்களை,கிழங்குகளை தேடி அலைய வேண்டியதில்லை,தான் செய்யும் விவசாயம் மூலம் தன் உணவு தேவைக்கு போக கொஞ்சம் மிச்சப்படுத்தும் நிலைக்கு அவன் வந்துவிட்டான்.மாமிசத்துக்காக நாள் முழுதும் கஷ்டப்பட்டு வேட்டையாட வேண்டியதில்லை ,தான் வளர்க்கும் வளர்ப்பு கால்நடைகளிலிருந்து தனக்கு தேவையான மாமிசம், பால், தோல் முதலியவை பல ஆண்டுகளுக்கு போதுமான அளவு கிடைக்கும். ஆரம்ப காலத்திலிருந்தே ஆண்கள் கால்நடைகளை பராமரித்து வந்ததால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொழிலில் ஆண்களின் ஆதிக்கம் நிலை கொள்ள ஆரம்பித்தது,கொஞ்சம் கொஞ்சமாக தாய் வழி சமூக அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்தது .

கால்நடைகள் உணவுக்காக மட்டுமின்றி பொதி சுமக்கவும்,பொருள்களை ஓரிடத்திலிருந்து வேறிடம் மாற்றவும் பயன்படுத்த துவங்கிய பின்பு குழுவில் உள்ள அனைவரும் உணவு உற்பத்தியில் ஈடுபட தேவை அற்றதாகிப்போனது எனவே சமூகத்தில் உள்ள சில பேரை உணவு உற்பத்தியில் (விவசாயத்திலிருந்து )இருந்து விலக்கு அளித்து (வியாபாரம் போன்ற) வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்( அதாவது உபரியான தானியங்களை விற்று வேறு பகுதிகளில் விளையும் தானியங்களை வாங்கும் பண்டமாற்று முறை)

இங்கு தான் உழைப்புப் பிரிவினை ஆரம்பமாகிறது.

வியாபாரம் மூலமும், கூட்டு உழைப்பின் மூலமும் அருகருகில் இருந்த சமூக குழுக்களுக்குள் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு ஒரு கலப்பு சமூகமாக மாற்றமடைந்தன.மனித உழைப்பு சக்தி பெருக பெருக மிகை உற்பத்தியான தானியங்களும் செல்வங்களும் பெருக ஆரபித்தன.இந்த சூழ்நிலையில் விவசாயம் பிரதான தொழிலாக அமையாத நாடோடி குழுக்களுக்கு விவசாய குழுக்களின் செல்வத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு படையெடுப்பு, கொள்ளை போன்றவை அரங்கேற துவங்கின.இந்த சூழ் நிலையில் ஈட்டிய செல்வதை பாதுகாத்துக் கொள்ளவும், தன் குழுவுக்குள், ஒழுக்கம் கட்டுப்பாடு போன்றவற்றை ஏற்படுத்தவும் ஒரு அமைப்பு ரீதியான தலைமையின் அவசியத்தை உணர்ந்தார்கள்.எனவே ஒவ்வொரு சமூக குழுவிலும் தலைவர்கள் தோன்ற ஆரம்பித்தனர்.

சமூக குழுத்தலைவரை அவரது குணங்களை கொண்டே முதலில் தேர்ந்தெடுத்தனர்,சமூக ஆச்சாரமான சடங்குகள் மந்திர வித்தைகள் ,ஆயுத பிரவேகம்,வேட்டை போன்ற விசயங்களுக்கே முக்கியத்துவம் இருந்தது.அந்த தலைவருக்கு  மக்கள் தாம் வேட்டையாடிய பொருள்களிலிருந்தும் சமூக செல்வத்திலிருந்தும் முதல் பங்கை கொடுக்க ஆரம்பித்தனர்.மேலும் சமூகத்தில் அவரை உயர்வாக மதித்து வந்தனர்.இவ்வாறு வெவ்வேறு பகுதிகளில் உள்ள குழுக்களில் உழைக்காமல் பிறர் உழைப்பில் வாழும் முக்கியஸ்தர் வர்க்கம் தோன்ற ஆரம்பித்தது.

அதுவரை பூமி, கால்நடைகள் மற்றும் சமூக செல்வங்கள் அனைத்தும் பொதுவுடைமையாக இருந்தது. அதன் பின் அதன் மீதான தலைவரின் கட்டுப்பாடு அதிகமானது,அதாவது சமூக சொத்துக்களை பங்கிடும் உரிமை தலைவருக்கே இருந்தது .நல்ல வளமான நிலங்கள், கனிமங்கள் கிடைக்கும் சுரங்கங்கள் அனைத்தின் மீதும் தலைவர்கள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தனர்.அப்போது மந்திர வித்தைக்கு முக்கியத்துவம் இருந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, பஞ்சம் போன்ற இயற்கை அழிவுகளுக்கு காரணம் யாருக்கும் தெரியாததை பயன்படுத்திக்கொண்டு மந்திர தந்திரம்,பிரார்த்தனை,பலிகள் ,சடங்குகள் மூலம் கடவுளின்(!?) ஆசியை பெற்றுத்தரும் பூசாரி வர்க்கம் உருவாக ஆரம்பித்தது. இவர்களும் சமூகத்தில் உழைப்பிலிருந்து விலக்கு பெற்றவர்களாக ,முக்கியஸ்தர்களாகவே நிலை பெற்றனர்.

சமூக குழு தலைவர்களும் மத குருக்களும் தங்களை கடவுளாகவோ கடவுளின் பிரதிநிதிகளாகவோ காட்டிக்கொண்டனர்.சமூக உபரி செல்வம்,இயற்கை அழிவிலிருந்து மக்களை காக்கும் (!?) பொறுப்பு ,அதற்கான 'தகுதி' ,போன்றவை தமக்கே உரியதென காட்டிக்கொண்டனர்.எனவே அந்த வர்க்கம் அதிகாரத்துக்கு வந்தனர்.சமூகத்தின் மீது அதன் பிடி கெட்டியாக இறுகியது.

புதிதாக உருவான உயர் வர்க்கம், உழைக்காமல் சமூக உபரி செல்வத்தில் தனது பங்கை(!?) எடுத்துக்கொண்டதோடு நில்லாமல் புதிய உற்பத்தி முறையில் பிறர் உழைப்பை நிர்ப்பந்தித்து சுரண்டும் உரிமையை நிறுவி செல்வம் சேர்க்க ஆரம்பித்தனர்.வெளி சமூகத்திலுள்ள நபர்களை மட்டும் அடிமைகளாக்கி சுரண்டுவது தமது பேராசைக்கு போதாமல் போகவே தமது சொந்த குழுவிலுள்ள சுதந்திர மக்களையும் அடிமைகளாக்கி சுரண்ட ஆரம்பித்தனர்.இவ்வாறு ஆண்டான் அடிமை சமூகம் ஏற்பட்டது. இந்த காலத்திலேயே சாதிகளின் எளிமையான தோற்றம் ஆரம்பித்து விட்டன ,அதாவது உடல் உழைப்பில் ஈடுபடும் மக்களை கீழானவர்கள் என்று புதிதாக உருவான ஆதிக்க வர்க்கம் திட்டமிட்டு மோசடியான ஒரு கருத்தியலை விதைத்தது .பொருளாதாரத்தில் பின் தங்கிய ,விழிப்புணர்வற்ற உழைக்கும் வர்க்கம் அதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாமல் அடங்கிப்போகுமாறு சமூக தலைமையாலும் பூசாரிகளாலும் நிர்பந்திக்கப்பட்டனர்.இன்னும் எளிமையாக சொன்னால் கடவுளர் தத்துவங்களால் அடிமையாக்கப்பட்டனர்.

இந்தியாவில் கி.மு.2500 -1500 ஆண்டுகளில் சிந்து மற்றும் இதர நாகரிக பகுதிகளில் நகர வாழ்க்கை நன்கு வளர்ச்சியடைந்து இருந்தது இதற்க்கு காரணம் ஆண்டான் அடிமை சமூகத்தின் சமூக பொருளாதார புரட்சிகர மாற்றங்களே ஆகும்.கி.மு.1800 ஆண்டு வரை இந்த நாகரிகம் செழிப்பாக இருந்தது எகிப்து,சுமேரிய,அசீரியா,கிரீஸ்,துருக்கி,ஈரான் போன்ற பிரதேசங்கள் வரை பரவி அதன் விளைவாக புதிய புதிய ராஜ்யங்கள் தோன்ற ஆரம்பித்தன.இந்தியாவிலும் தெற்கே நர்மதை வரையிலும் கிழக்கில் யமுனை வரையிலும் பரவி இருந்தது.

இந்த காலகட்டத்தில் தான் மனித குல வரலாற்றில்மிக முக்கிய திருப்பம்ஏற்படுகிறது. அதாவது விவசாயத்தை பிரதான தொழிலாக கொள்ளாத பல குழுக்கள் இந்த சமஸ்தானங்கள் மீது படையெடுத்து வென்றன.அதில் ஒரு பிரிவு ஈரான் மீது படையெடுத்து பலுசிஸ்தான் அப்கானிஸ்தான் மலைகளை கடந்து இந்தியாவில் நுழைந்தது. .தொடர்ந்து போர்களின் மூலம் நல்ல பயிற்சி பெற்றிருந்த அவர்கள் இந்த சமஸ்தானங்களை எளிதில் வென்றனர். ,சிந்து ஹரப்பா,மொஹஞ்சதாரோ நாகரிகங்கள் நிர்மூலமாக்கப்படன.இதையே நாம் ஆரியர் படையெடுப்பு என்று படிக்கிறோம்.

இங்கு ஏற்கனவே முளை விட்டிருந்த சாதியமும் ஆரியர்கள் கொண்டு வந்த வர்ண வேறுபாடும் கலந்து புதிய சாதிகள் உருவாகின.

தோழர் சு.போ.அகத்திய லிங்கம் வார்த்தைகளில் சொன்னால்..

"..இவ்வாறு கங்கை யமுனை இடைப்பகுதியில் ஆரியம் பரவியபோது அவர்கள் கருப்பையில் சாதியமைப்பு தோன்றியது,அதாவது இங்கே திராவிட மற்றும் பழங்குடியினரிடையே இருந்த குறைந்தபட்ச செயல் வடிவமான சாதியும் ஆரியர்களின் வர்ணமும் கலந்தது.இங்கு நிகழ்ந்த கோத்திர கலப்பு, தொழில் பிரிவினை,அகமன முறை எல்லாம் சேர்ந்து நூற்றுக்கணக்கான சாதிகளும் உப சாதிகளும் உருவாகின...."

"கி.மு.1000 -800 வாக்கில் ரிக் வேதத்தின் 10 ஆம் ஷுக்சம் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது,இதையடுத்து  வேத விளக்கங்கள் எழுந்தன....இதில் ஐதேரிய பிராமணமும் ஷதயத் பிராமணமும் வர்ண வேற்றுமையை தவிர்க்க முடியாததாகவும் இயல்பானதாகவும் சித்தரித்தன ,சூத்திரர்களை இழிந்தவர்களாக சித்தரிக்கும் இப்பகுதி புருஷ சூக்தம் எனப்படுகிறது.வர்ண பிரிவினைக்கு ஒரு தெய்வீக தத்துவ பாதையை அளிக்கிறது .இந்த கருத்துதான் சாதிய அமைப்பின் முதுகெலும்பாய் திகழ்கிறது,சாதியம் எனும் கொடிய நெஞ்சின் ஊற்று இதுதான்..."


கி.பி மூன்றாம் நூற்றாண்டில் அசோகப்பேரரசு புத்தமதத்தை அரச மதமாக அறிவித்ததை தொடர்ந்து மௌரியபெரரசின் 140 ஆண்டுகாலம் பிராமணர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பாகவே இருந்தனர். மீண்டும்  பிராமினிய ஆதிக்கத்தை நிலைநாட்ட புஷ்யமித்திரன் ஆட்சியை பிடிக்கிறான்.

"வெறும் அடக்கு முறையின் மூலம் மட்டுமல்லாமல் அதற்க்கு ஒரு கருத்தியல் வடிவம் கொடுத்தால் மட்டுமே அடக்குமுறை எளிதாகும் ,நீடித்து பயன்தரும் என்று உணர்ந்ததால் கி.மு 170 -150  ஆண்டுகளில் மனுதர்மம் புனையப்பட்டதாக கருதப்படுகிறது"(சு.போ.அ).

ஆண்டான் அடிமை சமூகத்தில் அடிமைகள் (தொழிலாளர்கள்)  தங்கள் உடல்,உழைப்பு,உடமை,உற்பத்தி என்று எதன் மீதும் உரிமையற்றவர்களாக இருந்தனர்.காலப்போக்கில் இந்த சமூக அமைப்பு முடிவுற்று நிலப்பிரபுத்துவ அமைப்பு உருவானது.இதில் தொழிலாளர்களின் உடல் மீதும் உற்பத்தி மீதும் நில பிரபுக்களுக்கு அதிகாரம் இல்லை என்றாலும் உழைப்பின் மீது முழு அதிகாரம் இருந்தது, அதாவது தொழிலாளர்கள் கட்டாயம் கூலியின்றி நில பிரபுவின் நிலத்தில்  வேலை செய்தாக வேண்டும்.

இந்த நிலப்பிரபுக்கள் அரசு அதிகாரத்தில் வசூல் பிரதிநிதியாக இருந்தனர். அவனிடம் சிறு படையும் இருந்தது. யுத்த சமயத்தில் அரசனிடமிருந்து அழைப்பு வரும் போது அந்த படையை அனுப்புவதும் மற்ற சமயங்களில் அந்த படையை கொண்டு தமது அதிகாரத்திற்கு உட்டபட்ட பகுதியில் தனது தன் மேலாண்மையை நிரூபிக்கவும் பயன்படுத்திக் கொண்டான்.ஒவ்வொரு பகுதியிலும் நிலப்பிரபுக்கள் அந்தந்த பிரதேசத்தின் ஆட்சியாளர்களாக இருந்தனர்.மத்திய ஆட்சியில் பலவீனம் ஏற்படும் போது இவர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சுதந்திர ராஜ்யங்களை உருவாக்கினர்.

இதன் பிறகு இந்தியா, அமெரிக்காவின் கடல் பாதை கண்டறியப்பட்ட பின் ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் துவங்கின .ஐரோப்பிய வியாபாரத்துக்கும் பொருள் உற்பத்திக்கும்  ஏற்ற சரியான சூழல் இந்த பகுதிகளில் நிலவவே ஐரோப்பிய முதலாளித்துவ உற்பத்தி முறை ஆரம்பமானது.

நிலபிரபுத்துவ சமூகத்தில் தொழிலாளர்கள் தத்தமது பகுதிகளுக்கு தேவையான உற்பத்தியே செய்து வந்தனர்.அதையும் தத்தமது சுதேசி உற்பத்திக்கருவிகள் கொண்டே செய்து வந்தனர். ஆனால் ஐரோப்பிய முதலாளிகளின் வரவுக்கு பின் இந்த தொழிளார்களுக்கு  பட்டறைகள் அறிமுகமாயின ,அங்கு உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களே முதலாளிகள்.அவர்கள் வேலைப்பிரிவினை, கூட்டுறவு சித்தாந்தம் மூலம் உற்பத்தியை பலமடங்கு உயர்த்தினர்.மலிவான விலையில் பொருள்கள் உற்பத்தி ஆயின .கைகளால் செய்யும் வேலையை இன்னும்  வேகமாகக இயந்திரங்களும் அந்த இயந்திரங்களை இயக்க நீராவி இயந்திரமும் கண்டறியப்பட்டன இவ்வாறு உலகம் முதலாளித்துவ திசையில் வேகமாக ஓட ஆரம்பித்தது.
மேலும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க இப்போது நிலவி வரும் நில பிரபுத்துவ கட்டமைப்பை உடைக்க வேண்டியது அவசியம்.   ஏனெனில் இந்த கட்டமைப்பில் ஒவ்வொரு தொழிலாளியும் தன் எஜமானனுக்கு (நிலப்பிரபுவுக்கு)கட்டுப்பட்டவனாகவே இருக்கிறான்.  எனவே இந்த கட்டமைப்பை உடைக்காமல் தொழிலார்களின்   பற்றாக்குறையை சமாளிக்க முடியாது என்று உணர்ந்த முதலாளிகள் பிரபுக்களுக்கு எதிராக மோதலை துவங்கினர்.
1789 இல் பிரெஞ்சு முதலாளிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை தாங்கி சுதந்திர கோஷத்துடன் மாபெரும் புரட்சியை செய்தனர் .இதுவே வரலாற்றில் பிரெஞ்சு புரட்சி எனும் பெயர் பெற்றதை நாம் அறிவோம்.இவ்வாறாக இறுதியாக நிலப்பிரபு முறை ஒழிக்கப்பட்டு முதலாளித்துவ முறை வெற்றி பெற்றது.இன்று ஒட்டு மொத்த உலகையும் மொத்தமாக உறிஞ்சிக்குடிக்கும் தணியாத தாகத்துடன் உலகம் முழுதும் உலகமய தாராள மய சூழ்ச்சி வலையை விரித்து வைத்து காத்திருக்கிறது.

இப்போது நமது முக்கிய பணி எது?
சாதிய முரணை எதிர்த்து பயனிப்பதா ?வர்க்க முரணை எதிர்த்து பயனிப்பதா ?
உண்மையில் ஆழமாக புரிந்து கொண்டால் இரண்டும் வேறு வேறு அல்ல,
மனிதனை சுரண்டும்  அப்பட்டமான சுயநல அமைப்புதான் இரண்டும்.

பெரியாரையோ,அம்பேத்கரையோ தவிர்த்து மார்க்சிய வழியிலோ அல்லது
மார்க்சியம் தவிர்த்து பெரியார்,அம்பேத்கர் வழியிலோ சென்று

இந்த சமூக நோயை நாம் நிச்சயம் வென்றிட முடியாது .


பெரியார், அம்பேத்கர் முன்னெடுத்த  இயக்கங்களை
மார்க்சிய வழியில் தொடர்ந்து கொண்டு செல்வதே

நம் முன் இருக்கும் தவிர்க்க முடியாத முக்கிய கடமை...


உதவிய நூல்கள் ...
1 .மனிதக்கதை-பிரபாகர் சான்ஸ்க்ரி (தமிழில் க.மாதவ்)
2 .குடும்பம் தனிசொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் -பி.எங்கல்ஸ்.
3 .இ.எம் .எஸ் .நூற்றாண்டு மலர் -கே .வரதராசன் கட்டுரை.
4 .சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள் - சு. போ. அகத்திய லிங்கம்.
5 .வால்காவிலிருந்து கங்கை வரை -ராகுல்  சாங்கிருத்தியான்

- தோழர் ஹீரா

பேட்டை தாதாவும் வேட்டை நாயும்..!



தினந்தோறும் ஊடகங்களில் வெளிவரும் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னை பற்றிய செய்திகளை பார்க்கும்போது ,ஏதோ இஸ்ரேலும் பாலஸ்தீனும் பக்கதுபக்கதது நாடுகள் நாடுகள் என்றும் அவைகளுக்கிடையே ஏதோ எல்லை பிரச்னை என்றோ அரசியல் பிரச்னை என்றோ நம்மில் இன்னும் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம் .அனால் இதில் ஒளிந்துள்ள உண்மைகளை வரலாற்று பின்னணியில் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் . 


உண்மையில் இது அரசியல் பிரச்னை இல்லை ,இருப்பியல் பிரச்னை. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ,இரண்ண்டாம் உலக்காகப்போருக்கு பின் பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்த நாடுகள் ஒவ்வொன்றாக விடுதலை அடைந்த பிறகும் 21 ஆம் நூற்றாண்டில் இன்று வரை பாலஸ்தீன் மக்கள் அடிமை வாழ்வை வாழ்கிறார்கள் .இதை விட பெரிய கொடுமை என்னவென்றால் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர் . 

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஹிட்லரின் நாஜிப்படைகள் நிகழ்த்திய யூத ஒழிப்பை நாம் அறிவோம் .அதற்கெல்லாம் வெகு காலம் முன்னமே , 15 ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே ஸ்பெயின், போர்சுகல் ,மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் யூதர்களை களை எடுக்கும் அல்லது அப்புறப்படுத்தும் வேலை மும்மரமாக நடந்தது , இது ஹிட்லர் காலம் வரை தொடர்ந்தது . 

எல்லா தேசங்களும் யூதர்களை வெறுக்க காரணம் என்ன ?யூதர்களின் இன உணர்வுதான் .யூத மதம் தான் உலகிலேயே சிறந்த மதம் ,யூத இனம் மட்டுமே மற்ற எல்லா இனங்களையும் விட மேண்மையானது என்று அவர்கள் கொண்டிருந்த வீண் ஆணவமும் வெட்டி செருக்குமே காரணம் . 

அடுத்ததாக அவர்களின் குயுக்தி எண்ணங்கள் ,தமது தொழில், வியாபாரம் ,மேன்மையடைய எந்த கெட்ட காரியம் செய்வதற்கும் தயாராக இருந்தார்கள் .அகதிகளாக செல்கிற தேசத்தில் உள்ள சுதேசி தொழில்களை நசுக்கி, இவர்களது தொழில் மேம்பட வேண்டி அரசு அதிகாரி முதல் நீதிபதிகள் வரை லஞ்சம் கொடுத்து காரியங்களை சாதித்து கொண்டனர் . பல நாடுகளில் பல 'கேதான் தேசாய் 'களை உருவாகினார்கள் . 

எந்த வகையிலாவது தகிடுதத்தம் செய்து தங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொண்டு மற்ற சுதேசி மக்களை ஏளனம் செய்ததோடு மற்றவர்கள் தங்களுக்கு கீழானவர்கள் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள் ,எனவே எல்லா நாடுகளிலும் சுதேசி மக்களின் வெறுப்புக்குள்ளாகி அங்கிருந்து விரட்டப்பட்டனர் . 

வாழ வழியில்லாமல் தமக்கென சொந்தமாக ஒரு தேசம் இல்லாமல் உலகம் முழுவதும் நாடோடிகளாய் ஓடிக்கொண்டிருந்த யூதகூட்டதை அரவணைத்து வாழ இடம் கொடுத்து பாதுகாத்தது பாலஸ்தீன் மக்கள் தான் .அந்த பாலஸ்தீன் மக்களை ஏமாற்றி, அராபியர்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகத்தின் மூலம் உருவானதுதான் இஸ்ரேல் . 

1948 ஆம் ஆண்டுவரையில் இஸ்ரேல் என்ற ஒரு தேசமே கிடையாது .பாலஸ்தீன் என்ற பரந்த தேசமே இருந்தது . 

1875 ஆம் ஆண்டுவாகில் பாலஸ்தீனில் அகதிகளாக குடியேறிய யூதர்கள் உலகமெங்கும் தம்மக்கள் படும் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வு காண எண்ணினர்,அப்போது அவர்கள் ஏற்ப்படுத்திய கொள்கையே ஜியோனிசம் ஆகும் .அதற்காக உலகம் முழுதும் உள்ள யூதர்களிடம் நிதியுதவி பெற்று பாலஸ்தீனில் நில வங்கி உருவாக்கப் பட்டது .இதன் வேலை என்னவெனில் பாலஸ்தீனில் உள்ள விவசாய நிலங்களை விலைக்கு வாங்குவதும் அந்த இடத்தில மும்மரமாக யூத குடியிருப்புகளை நிறுவுதலும் ஆகும் ,இதே வேலையை தான் இலங்கையில் சிங்களனும் செய்தான் என்பது நினைவிருக்கிறதா ? 

மேலும் நில வங்கிகள் மூலம் கடன் கொடுக்கப்பட்டது .படிப்பறிவில்லாத அராபியர்களிடம் பல்வேறு ஏமாற்று நிபந்தனைகளுடன் கூடிய பத்திரங்களில் எழுதி வாங்கி அதிக வட்டிக்கு கடன் கொடுத்தது .நாட்கள் செல்லசெல்ல அதன் சுயரூபம் தெரிய வந்தது .ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதிக வட்டி அபராத வட்டி என்று சொல்லி அராபியர்களின் நிலங்களை பறிமுதல் செய்தனர் .இடை எதிர்த்து பொங்கிய அராபியர்கள் குண்டர்களை கொண்டு அடக்கப்பட்டனர்.கொஞ்சம்கொஞ்சம்காக பாமர மக்களின் வயிற்றில் அடித்து நில வங்கி செழித்து வளர்ந்தது .பிறகு கடன் வாங்காத அராபியர்களில் சிலருடைய நிலமும் கட்டாயமாக பறிமுதல் செயப்பட்டது .அரசாங்கமும் நீதித்துறையும் லஞ்சத்தில் மூழ்கி அநீதித்துறையாக மாறி நில வங்கிக்கு துணை போயின . 

இதற்கிடையில் முதல் உலகப்போரின் முடிவில் பாலஸ்தீனை பிரிட்டன் கைப்பற்றி அதன் காலனியாககிகொண்டது ,அப்போது அதன் வெளிஉறவு துறை அமைச்சர் ஆர்தர் பால்பர் என்பவர் மகா நயவஞ்சக பிரகடனம் ஒன்றை வெளியிட்டார் அதன் சாரம் "பாலஸ்தீனில் யூதர்களுக்கு தனி நிலப்பரப்பு அமைக்கப்படுகிறது , இப்போது அங்கு வசிக்கும் யூதர்கள் அல்லாதவர்களின் பொது உரிமை , மத உரிமைகள் பாதுகாக்கப்படும் " 

அதாவதுபூர்வீகமாக அங்கு வாழும்அராபியர்களை, யூதர்கள் அல்லாதவர்கள் என்று குறிப்பதன் மூலம் நிராகரித்து வந்தேறிகளான யூதர்களை மண்ணின் மைந்தர்களாக திரித்து கூறியது ,எனவே தான் வரலாற்று ஆசிரியர்கள் பால்பர் பிரகடனத்தை "வடிகட்டிய அயோகியத்தனம் "என்று வர்ணிக்கிறார்கள். 

பிறகு ஜியோனிசம் சார்பாக ஒரு அழைப்பு வெளியிடப்பட்டது "உலக யூதர்களே பாலஸ்தீன் வாருங்கள் நமக்கான ஒரு தேசத்தை அமைப்போம் " அவ்வளவுதான் உலகெங்கிலும் இருந்து யூதர்கள் அலைஅலைஎன வந்து குடியேறினர் .POSPORT ,விசா , எதுவும் தேவையில்லை நீ யூதனா உள்ளே வரலாம் என்கிற நிலை .இந்த அராஜக குடியேற்றங்களுக்கு பிரிட்டன் முழு ஆதரவு கொடுத்தது ,அப்போதைய பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் T இஸ்ரேலி ஒரு யூதர். 

பிறகு பிரிட்டன் பாலஸ்தீனுக்கு சுதந்திரம் கொடுத்து போனபோது தன குள்ளநரி வேலையை செய்து பிரிவினை செய்து ஒரு நிரந்தர பதட்டம் அங்கு ஏற்ப்படுத்தியது . 


1948 மே 14 அன்று இஸ்ரேல் உருவானதாக யூதர்கள் அறிவித்தார்கள் .அடுத்த நிமிடமே பாலஸ்தீன போராளிகளும் , இராக் ,எகிப்து, ஜோர்டான் .சிரியா ,லெபனான் ,போன்ற அண்டை நாடுகளும் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன .அப்போது உலக நாடுகளின் நாட்டாமை அமெரிக்க தலையீட்டால் ஐய் நா சபை போர் நிறுத்தம் கொண்டுவர சொன்னது .ஐ நா வாக்குப்படி எந்த நாடுகள் எங்கு நிலை கொண்டுள்ளதோ அது வரை அந்த நாடுகளுக்கு சொந்தம் . 

எகிப்து காசா வரை முன்னேறியிருந்தது ,ஜோர்டானுக்கு மேற்கு கரை சொந்தமானது, மீதமிருந்த நிலப்பரப்புகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்திருந்தது , சரி இப்போது பாலஸ்தீன் எங்கே ? பாலஸ்தீன் மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாறிப்போனது இப்படி தான் . 

சரி உலகங்களின் போலீஸ்காரன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பக்கா திருடனான அமெரிக்க இஸ்ரேலை ஆதரிக்க என்ன காரணம்? காரணம் எண்ணெய்,இஸ்ரேலில் பெரிதாக எண்ணெய் வளம் இல்லையென்றாலும் அதை சுற்றியுள்ள நாடுகள் எண்ணெய் வளம் மிக்கவை ,அவற்றோடு ஒப்பந்தம் செய்து கொண்டு என்னையையும் அந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் உறிஞ்சும் பகாசுர திட்டம். அதற்க்கு ஒரு தளம் தேவை ,தன வழிக்கு வராத தேசங்களை மிரட்டி பணியவைக்க தன ராணுவ தளம் ஒன்று மதிய கிழக்கில் தேவை , எனவே தான் இஸ்ரேலை தன வேட்டை நாயாக ஆக்கிக்கொண்டது ,இஸ்ரேல் ராணுவ உதவி, நிதி உதவி போன்ற எலும்புதுன்ன்டுகளை பெற்றுக்கொண்டது ...

- தோழர் ஹீரா

நிறைந்து போன குப்பை தொட்டிகள் ...



எங்கிருந்து வந்தாய் ? -   நீ எங்கிருந்து வந்தாய்...?
நிலம் நீர் காற்றில் நிறைந்திருந்தாய்
நெருப்பில் ஆகாயத்தில் கலந்திருந்தாய்

ஒருங்கிணைந்து போனாய் தந்தைக்குள் சக்தியாக
தள்ளப்பட்டாய்  தாய்க்குள்  சகதியாக
கோடி உயிர்களோடு போராடி வென்றாய்
முட்டி மோதி அண்டம் துளைத்தாய்

சில நாள்  இரத்தக் கட்டியாக
சில நாள் சதைப்பிண்டமாக
உருமாறி உருமாறி உருவமடைந்தாய்

ஒருநாள்  துப்பப்பட்டாய்
ஐம்புலன்களை கொண்ட அதிசய  மிருகமாய்

 இப்போது நீ  காலியான குப்பை தொட்டி
உன்னுள் கொட்டப்பட குப்பைகள் காத்திருக்கின்றன
தவழ , நிற்க , நடக்க கற்றுக்கொள்ளும் வரை
அனுமதிக்கப்பட்டாய்  நீ நீயாக இருப்பதற்கு

தாய் மொழி கற்றாய்  அதன்மூலம் சிந்திக்க கற்றாய்

உயரமாய் ஒன்றை காட்டி மரம் என்றார்கள்
உயரமாய் இருப்பதெல்லாம் மரமா? என்றாய்
இல்லையில்லை அது மாமரம் இது தென்னை மரம்
வேறுபாடு சொல்லித்தந்தார்கள்

உருண்டையாய் ஒன்றை காட்டி பந்து என்றார்கள்
உருண்டையாய் உள்ளதெல்லாம் பந்தா? என்றாய்
இல்லையில்லை அது மஞ்சள் பந்து இது வெள்ளை பந்து
வேறுபாடு சொல்லி தந்தார்கள்

நம்பத்துவங்கினாய் - அவர்கள் சொல்வதெல்லாம்
உண்மையென உள்வாங்க துவங்கினாய்

நட்ட கல்லை சுட்டிக்காட்டி சாமி என்று சொன்னார்கள்
முட்டி போட்டு கும்பிட்டா மோட்சம் என்று சொன்னார்கள்
வேதப்பொய்கள் , புராணப் புரட்டுகள்
இதிகாச இட்டுகள் ,கலர் கலர் பொய்கள்

அப்போதே கொட்டப்பட்டது ஆன்மீக குப்பை

தந்தை அடிக்கும்போது தாய் பணியும்போது
தானாக நுழைகிறது ஆணாதிக்க குப்பை

பெண்ணை பொருள் என்று- அவள்
உடலை போகமென்று  - தினம்
பலநூறு வாய்கள் மென்று
பலவாறு பொய்கள் துப்ப
பட்டென்று கொட்டியது ஆபாசக் குப்பை

பாடப்புத்தகங்கள் ஒருபோதும் முழு உண்மை சொல்லாது
நூறாண்டுகால வாழ்வியலை , ஒரு தேசத்தின் வரலாறை
அரைப்பக்கத்தில் அடைத்து படித்துக்கொள் எனும்போது
படிப்படியாய் கொட்டியது திரிபுக் குப்பை

தேர்ச்சி பெறுவதே தேவை என்றும்
மதிப்பெண் பெறுவதே மார்க்கம் என்றும் -உன்னை
நவீன அடிமையாய் உருவாகினார்கள்

இன்றைய உலகை வெல்ல
எல்லோரையும் முந்திச்செல்ல
களவு செய்,கொலை செய், எதுவும் செய்

கொலை செய்கையில் கைகள் நடுங்கினால்
சிங்களனை பார்த்துக்கொள்
பௌத்தமும் கொலை செய்யும்  -உன்னை
சமாதானம் செய்துகொள்

சந்தைப் பொருளாதாரம் - உன்னை
சரக்காக மாற்றும்

உனக்கென தனி நியாயங்கள்
உனக்கென தனி தீர்வுகள்
ஊசி துளைக்கும் வாழைப் பழமாய்
ஊடுருவும் குப்பைகள் உனக்குள்ளே

ஆனாலும் மறக்காமல் ஐவேளை தொழுதுகொள்
மறுமையின் சுகவாழ்வை முன்பதிவு செய்துகொள்

நீயும் நானும் , நம்போல்  யாவரும்
நிறைந்துபோன குப்பை தொட்டிகளே

நிறைந்து போன குப்பைகளில்
மனிதம் தொலைந்து போகட்டும்
முடையாய் நாறும் மனதுக்குள்
மானுடம் மட்கிச் சாகட்டும்
உன்மனம் உன்னை உறுத்தலாம்
உனக்கே உன்னை வெறுக்கலாம்

ஆனாலும் பொறுத்துக்கொள்
அப்படியே சகித்துக்கொள்

பிறர் வலியை பிறர் வேதனையை
நின்று பார்ப்பது நேர விரையம்
ஓடு பணம் தேடி ஓடு
உன் வாழ்வே முடியும் வரையிலும்
பணம் தேடியே ஓடு

சலிப்படியும் போது
டாஸ்மாக் தேடு

இளைப்பாறுதல் வேண்டுமா? - தேவனின்
பரிசுத்த ஆவியை நாடு

உன் கொலை, களவு, காமமெல்லாம்
தேவனால் மன்னிக்கப்படும்
உன் பாவக்குப்பைகள் எல்லாம்
தேவனால் சுமக்கப்படும்

ஆமென்...

- தோழர் ஹீரா

சாதின்னா என்னங்க எசமான்....

                                                           படம்: நன்றி வினவு   



உள்ளே நுழையாதே                         
ஊழியம் செய்ய பிறந்தவனே 
உள்ளே நுழையாதே....

ஏன் எசமான் என்னை தடுக்கறீங்க ?
என்ன குற்றம் எங்கிட்ட பாத்தீங்க?

நீ வேற சாதியடா வெவரமற்றவனே,
நீ தாழ்ந்த சாதியடா தகுதியற்றவனே....

என்னைப்போலத்தான் நீங்களும் இருக்கீங்க
உங்களைப்போலத்தான் நானும் இருக்கேன்,
நம்மை வேறுபடுத்தும் சாதிஎதுவும் -என்
கண்களுக்கு காணலையே,
வெவரமா சொன்னா  வெளங்கிககுவேன்  எசமான்...

நான் திருமால் தலையில் பிறந்த
உயர்ந்த சாதியடா,-நீ
காலில் பிறந்ததனால்
தாழ்ந்த சாதியடா....
வேதப்புத்தகத்தில் உள்ளதெல்லாம்
படிக்க உனக்கு தகுதி இல்லையடா...

எம்புள்ள படிக்கிற அறிவியல் புத்தகத்தில்
மனுஷனுக்கு கருப்பை வயித்துல இருக்குதுன்னு
படம் வரஞ்சு பாகம் குறிசிருக்கே-உங்க
வேதம் சொல்றது பொய்யுங்க எசமான்-அந்த
பொய்கள படிக்க எனக்கு ஆசையில்ல எசமான்.

அப்படின்னா பொய்கள் தான் சாதியா எசமான் ?

எதிர்த்துப்பேசாதே எகத்தாளம் புடுச்சவனே,
திருப்பிபேசாதே திமிரு பிடுச்சவனே,
கூலி கொடுக்கும் பண்ணையார் நான்,
கூலிக்கு உழைக்கிற அடிமை நீ
இந்த வேறுபாடு சாமி படச்சதடா ....

நீங்க அப்படி இருக்க காரணமும் சாமியில்ல ,
நான் இப்படி இருக்க காரணமும் சாமியில்ல ,
என் உழைப்ப சுரண்டி உங்க வயிறு பெருக்குது 
உங்களுக்கு உழைச்சு உழைச்சு என் வயிறு சுருங்குது,
பொது உடைமை ஆட்சி வரப்போகுது எசமான்-அப்ப
உங்களுக்கும் எனக்கும் ஒரே பேருதான் எசமான்
உழைப்பாளி என்கிற ஒரே பேருதான் எசமான் .

அப்ப காசு பணம் தான் சாதியாஎசமான் ?

எம்பேருக்கு பின்னாலே சாதி பேரு  போட்டா
அது எனக்கு கௌரவண்டா
உஞ்சாதி பேரு சொன்னாலே கேவலண்டா...

எம்பெயர எங்கப்பா அம்மா  வச்சாங்க
உங்க பெயர உங்க அம்மா அப்பா வச்சிருப்பாங்க
செத்துப்போனா உங்களுக்கும் எனக்கும்
 ஒரே பேருதான் எசமான்
பொணம் என்கிற ஒரே பேருதான் எசமான் .

அப்படின்னா பேருதான் சாதியா எசமான் ?

உன்னைப்போல பேசுன எல்லோரும்
போன எடம் தெரியுதா?
நந்தனுக்கு ஆன கதியில்
 உனக்கு பாடம் இருக்கு புரியுதா ?
கீழ வெண்மணி வரலாறு
 சொன்ன செய்தி விளங்குதா?.....

நல்லா தெரியுது எசமான்,
விவரம் புரியுது எசமான்
ஒன்னு மட்டும் சொல்லுறேன் எசமான்
நந்தனப்போல் எரிஞ்சுபோக
இது புரானக்காலமும் இல்ல எசமான்
கீழ வெண்மணிபோல் கருகிப்போக
இது அறியாமைக் காலமும் இல்ல எசமான்...,

அப்படின்னா இந்த கொலைவெறி தான் சாதியா எசமான்?


உடம்புக்குள்ள செங்குருதி ஓடுது எசமான்
நெஞ்சுக்குள்ள செங்கொடியும்  பறக்குது எசமான்
மார்க்சியம் இப்போ புரிஞ்சுபோச்சு எசமான்
பயமெல்லாம் நெஞ்சவிட்டு  பறந்துபோச்சு எசமான் ...
 உங்கள் பகட்டும், அதிகாரமும் பறக்கப்போகுது எசமான்
இனி வரப்போவது சாதிப்போர் இல்லை எசமான்
விண்ணை முட்டும் வர்கப்போர் எசமான்

வீரஞ்செறிந்த விவசாயப்படையொன்று வருகுது எசமான்
தோள் தடித்த தொழிலாளர் படையொன்று வருகுது எசமான்
சமதர்ம உலகு படைக்க செந்தொண்டர் படையொன்று வருகுது எசமான்
பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் நிலைக்கப்போகுது எசமான்....


ஐயோ ! என்ன கொடுமை இது!
கலிகாலம் இதுதானா கடவுளே,
கூலி கேட்கும்  கூட்டமெல்லாம்    கூடிவருகுதா ?
அடங்கிப்போகும் கூட்டமெல்லாம் ஆட்சி செய்யுதா ?
  தீண்டாமை சுவர்களெல்லாம் தூளாகப்போகுதா?
ஒசந்த சாதி, தாழ்ந்த சாதி ஒன்றாகப்போகுதா  ?
பண்ணையும்,அடிமையும் ஒன்றாகப்போகுதா ?
காற்று போல நிலமும் ,வளமும்  பொதுவாகப்போகுதா?

சாதிப்பேரால் ஏமாற்றி வாழ்ந்த வாழ்க்கை முடியப்போகிறதா?


அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?
அப்படின்னா ஏமாற்று வேலைதான் சாதியா எசமான் ?

- தோழர் ஹீரா

சனி, 22 ஜூன், 2013

ஈகோ தான் மானம் என்றால் மானம் கெட்டவர்களே கம்யூனிஸ்ட்டுகள்...

நேற்று திருப்பூருக்கு சென்றிருந்தேன் அங்கே CPM இல் இருந்து விலகிய சில நண்பர்களை சந்தித்து உரையாடிக்கொண்டு இருந்தேன். அப்போது நிறைய விசயங்களை விவாதித்து கொண்டிருந்தோம். அப்போது எதைப்பற்றியோ கேள்வி கேட்ட ஒருவரை மிக நாசுக்காக மற்றவர்கள் புறக்கணித்தனர். அவர் சென்ற பின்னர் அதைப்பற்றி கேட்ட பொழுது விடுங்க தோழர் அவன் சின்ன பையன் என்றனர். பொதுவாகவே பதில் தெரியவில்லை என்றால் இப்படிதான் 'சின்ன பையன்' என்று சொல்லி தப்பித்து கொள்வார்கள் என்று நான் கூறினேன்.(பிறகு அது ஒரு நீண்ட விவாதம் ஆனது)
இரவு வீடு திரும்பும் வழியில் இதே போன்ற ஒரு நிகழ்வு. என்னிடம் எனது தவறை (அவரை சந்திப்பதாக கூறி நேரத்துக்கு சந்திக்க முடியவில்லை) சுட்டிக்காட்டிய என்னைவிட 15 வயது குறைவான இளைஞனிடம் மன்னிப்பு கேட்டது என்னோடு வந்திருந்த என் சமவயது நண்பனுக்கு பிடிக்கவில்லை. அவன் கேட்க்கிறான். 'என்னடா சின்ன பையனுக்கேல்லாம் போயி மரியாதையா பதில் சொல்லிக்கிட்டு' நாளையும்பின்னியும் பார்த்தா மதிப்பானா? நீ கம்யுனிசம் பேசுறேன்னு இவனுக்கெல்லாம் மரியாதை கொடுத்து.......மானமே போச்சு என்றான்.
உண்மையில் மானம் என்பதன் பொருள் இதுதான் என்றால் மானம் கெட்டவர்களே கம்யூனிஸ்ட்டுகள் என்றேன். புரியாமல் குழம்பிய நண்பனுக்கு விளக்கினேன். நீ புரிந்துகொண்டிருக்கும் பொருளில் உள்ள மானம் என்ற சொல்லே நிலப்ரபுத்துவ சமூக அமைப்பின் நீட்சியே என்றேன். ஒண்ணுமே புரியவில்லை என்றான். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. பிறகு உதாரணமாக ஆடுகளம் படத்தில் வருமே இறுதிக்காட்சி அதில் அந்த முதியவரிடம் தனுஷ் சொல்லுவார். நீ செய்த எல்லாமே எனக்கு தெரியும் என்று உடனே தனது கழுத்தை அறுத்துக்கொண்டு செய்துவிடுவார் அந்த முதியவர். இது அவருக்கு மானம் போய்விட்டதால் எடுத்த முடிவு. ஆனால் உண்மையில் இது எந்தவகையான மனநிலை தான் செய்த தவறை தன்னிலும் சிறுவயது உடைய ஒருவனுக்கு தெரிந்து விட்டது நான் அவனைவிட மேலானவன் எனவே இனியும் உயிரோடு இருக்ககூடாது எனும் மனநிலை தானே. மாறாக அந்த இளைஞனிடம் (தனுஷ்) தனது தவறுகளுக்கு வருந்தி சுயவிமர்சனம் செய்துகொண்டிருக்க மணம் முன் வராததன் காரணமும் இதுவே இந்த மேலானவன் எனும் ''ஈகோ'' தான் அந்த வகையில் எந்த ஒரு தவறையும் ''ஈகோ'' இல்லாமல் சுய விமர்சனம் செய்து கொள்வதிலிருந்து விலகி ''மானம்'' என கட்டமைக்கப்பட்ட ஒரு சொல்லாடலை வைத்துக்கொண்டு சாக்கு சொல்பவர்கள் அல்ல கம்யுனிஸ்ட்டுகள். ஆனால் மானம் என்பதன் சரியான பொருளில் என்றால் அதாவது சுரண்டுவதற்கு எதிராக அடிமைப்படுத்துவதற்கு எதிராக வெகுண்டேழுவதுதான் மானம் என்றால். மானத்தில் புடம் போட்ட மானஸ்த்தர்களே கம்யூனிஸ்ட்டுகள்

ஒரு வெங்காயத்தின் கதை...



வழியில் கிடக்கும் கல்லை அப்புறப்படுத்த வெறும் சிந்தனை மட்டுமே போதாது என்றார் மார்க்ஸிம் கார்க்கி அது போலதான் கம்யூனிசமும் நடமுறைக்கு செல்லாமல் வெறும் புத்தக அறிவை வைத்து கம்யூனிசத்தை ஒருவர் கற்றுக் கொண்டார் என்பதும் கற்றுக்கொடுத்தார் என்பதும் பொய்யாகவே இருக்கும். கம்யூனிசம் மட்டுமே அல்ல எந்த ஒரு விஷயமும் நடைமுறை அனுபவம் இன்றி புரிந்து கொள்ள முடியாது. அப்படி புரிந்து கொள்ள
 முடிந்தால் முப்பதே நாளில் கராத்தே கற்றுக் கொள்ளுங்கள் எனும் புத்தகமே போதும் கராத்தே கற்றுக் கொள்ள. ஆயினும் புத்தகத்தில் படித்து கரத்தே போட்டியில் கலந்து கொள்ளாத அறிவு ,ஒரே நாளில் கம்யூனிசம் படித்ததாக கூறி கம்யூனிஷ்ட்டுகளை விமர்சிக்க துணிகிறது ஏன் என சிந்திக்க வேண்டும். 
ஏட்டு சுரைக்காய் கறிக்குதவாது என்பது ஒரு பழ மொழி சமீபத்தில் இதன் பொருளை நடைமுறையில் எனக்கு உணர்த்தினார் ஒரு ஃபேஸ்புக் போராளி, ஆம் பெரியவெங்காயம் நிறையா போட்டு ஆம்லேட் போட்டுக் கொடுத்தேன் அந்த நண்பருக்கு(நானே போட்டது) வெங்காயத்தை பார்த்தது அவர் “ என்னங்க பணக்காரன் ஆயிட்டீங்க போல” என்றார். ஏன் என்றேன் இல்லை வெங்காயம்தான் கிலோ 110ரூபாஇ ஆச்சேன்னார்.! இது பெரிய வெங்காயம்ஙன்னு சொன்னேன், கிளம்பும் போது அவர் சொன்னார் ஏங்க பெரிய வெங்காயம் விலை ஏறலையா? என்றார் இல்லைங்க ஏன் உங்களுக்கு தெரியாதான்னு கேட்டேன். இல்லைங்க ஃபேஸ்புக்கு பார்த்துட்டுதான் வெங்காயம் விலையேறுனதே தெரியும் அதுல எவன் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு மென்சன் பாண்றான்னு சொன்னார்....(நடைமுறை இல்லாத அறிவு)
சமீபத்தில் யுவகிருஷ்ணா கம்ய்யூனிசம் கற்றுக் கொண்டாதாகவும் அமைப்பில் இல்லாதவர் சொல்லிக் கொடுப்பதால் எளிதில் விளங்குகிறது என்றும் ஃபேஸ்புக்கில் எழுதியதை நினைத்து பார்த்தேன்